பவானி அருகே தாய் இறந்த துயரத்தில் தொழிலாளி தற்கொலை


பவானி அருகே  தாய் இறந்த துயரத்தில் தொழிலாளி தற்கொலை
x

தாய் இறந்த துயரத்தில் தொழிலாளி தற்கொலை

ஈரோடு

பவானியை அடுத்த மயிலம்பாடி அருகே உள்ள கண்ணாடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் தேவராஜ் (வயது 46). கூலி தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இன்னும் திருமணம் ஆகவில்லை. தாயுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேவராஜின் தாய் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் தேவராஜ் தனியாக வசித்து வந்தார். தாய் இறந்த துயரம் தாங்காமல் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் தனது தம்பி பொங்கியண்ணன் என்பவரிடம் தான் வாழ விரும்பவில்லை என்று கூறி புலம்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் தேவராஜ் மனமுடைந்தார். நேற்று மாலை விவசாயத்துக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டு தனது தம்பி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து விட்டதாக கூறி மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தேவராஜ் இறந்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story