செங்குன்றம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை - கோவில் குளத்தில் உடல் வீச்சு


செங்குன்றம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை - கோவில் குளத்தில் உடல் வீச்சு
x

தனியார் நிறுவன ஊழியரை வெட்டிக்கொலை செய்து, உடலை கோவில் குளத்தில் வீசிச்சென்ற சம்பவம் செங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட விஜயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 25). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தேவியாகுறிச்சி ஆகும். இவர், கடந்த 4 ஆண்டுகளாக இந்த பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த 20-ந்தேதி பிரவீன்குமார், ஊரில் உள்ள தனது தங்கையிடம் செல்போனில் பேசினார். அதன்பிறகு அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. பலமுறை அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்டும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய தந்தை, விஜயநல்லூர் வந்து பார்த்தார். அங்கு பிரவீன்குமார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது மகனை காணவில்லை என சோழவரம் போலீசில் புகார் அளித்தார்.

இந்தநிலையில் நேற்று காலை விஜயநல்லூரில் உள்ள செல்லியம்மன் கோவில் குளத்தில் பிரவீன்குமார் பிணமாக கிடந்தார். இதுபற்றி பொதுமக்கள் கொடு்த்த தகவலின்பேரில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் குளத்தில் பிணமாக கிடந்த பிரவீன்குமார் தலையில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தன. எனவே மர்மநபர்கள் பிரவீன்குமாரை வெட்டிக்கொலை செய்துவிட்டு, உடலை கோவில் குளத்தில் வீசி இருப்பது தெரிந்தது.

பிரவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், ேமலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமார் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசாா் தேடி வருகின்றனர். கொலையான பிரவீன்குமார் முதலில் ஒரு மசாலா கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதன்பிறகு தற்போது வேலை செய்த கம்பெனிக்கு வந்துவிட்டார். எனவே ஏற்கனவே வேலை பார்த்த இடத்தில் யாருடனும் அவருக்கு மோதல் உள்ளதா?அதன் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? எனவும், அவரது செல்போனில் கடைசியாக பேசியவர்கள் யார்? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story