கூடலூர் அருகே லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைவு


கூடலூர் அருகே  லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைவு
x
தினத்தந்தி 4 Nov 2022 6:45 PM GMT (Updated: 4 Nov 2022 6:47 PM GMT)

கூடலூர் அருகே லோயர்கேம்ப் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி குறைந்தது.

தேனி

முல்லைப்பெரியாறு அணை

கூடலூர் அருகே லோயர்கேம்பில் நீர்மின்உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

நேற்று முன்தினம் வரை 1,667 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதனால் 4 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 150 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வருகிறது. மேலும் முதல் போக நெல் அறுவடை பணிகள் நடைபெறுகிறது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு தண்ணீர் தேவை குறைந்து உள்ளது.

மின் உற்பத்தி குறைவு

இதன் காரணமாக நேற்று காலை முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 1,667 கன அடியில் இருந்து 511 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை முதல் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில், 2 ஜெனரேட்டரில் மட்டும் தலா 23 மெகாவாட் வீதம் மொத்தம் 46 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 134.25 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 763 கனஅடியாகவும் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 511 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு: பெரியாறு 6, தேக்கடி 25.2, கூடலூர் 6.4, உத்தமபாளையம் 1.6, வீரபாண்டி 12.2, வைகை அணை 2.8, மஞ்சளாறு 4.6, சோத்துப்பாறை 36, அரண்மனைப்புதூர் 4.6, போடி 12.4, பெரியகுளம் 28.


Next Story