நாசரேத் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை


நாசரேத் அருகே  காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
x

நாசரேத் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

காதலுக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே சின்னமாடன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் தாசன். இவருடைய மகன் விஜய் (வயது 17). பனையேறும் தொழிலாளி.

அதே ஊரைச் சேர்ந்தவர் சுடலைமணி மகள் மேகலா (16). உறவினர்களான இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கைது

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய்யும், மேகலாவும் வெளியூருக்கு சென்று, கோவிலில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினர்.

இதற்கிடையே, தனது மகளை காணவில்லை என்று சுடலைமணி, நாசரேத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேகலாவை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த விஜய் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர், மேகலாவுடன் மீண்டும் பேசி வந்தார். இதற்கு இருவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மனமுடைந்த விஜயும், மேகலாவும் நேற்று முன்தினம் இரவில் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறினார்கள். பின்னர் அவர்கள் அங்குள்ள குளத்தின் கரையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

போலீசார் விசாரணை

மாயமான காதல் ஜோடியை இருவரது குடும்பத்தினரும் தேடி வந்த நிலையில், குளக்கரையில் அவர்கள் விஷம் குடித்து இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நாசரேத் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தற்கொலை செய்த காதல் ஜோடியின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாசரேத் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story