சாத்தான்குளம் அருகே கார் டிரைவர் மர்ம சாவு


சாத்தான்குளம் அருகே கார் டிரைவர் மர்ம சாவு
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:45 PM GMT)

சாத்தான்குளம் அருகே கார் டிரைவர் மர்மமான முறையில் வீட்டில் பிணமாக கிடந்தார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொக்கலிங்கபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவருடைய மகன் இசக்கிமுத்து (வயது 37). கார் டிரைவரான இவர் மனைவி, குழந்தைகளுடன் நாகர்கோவிலில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.

இசக்கிமுத்து சொந்த ஊரான சொக்கலிங்கபுரத்தில் உள்ள வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சொக்கலிங்கபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்த இசக்கிமுத்து பின்னர் நாகர்கோவிலுக்கு திரும்பி செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

மர்ம சாவு

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இசக்கிமுத்துவின் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. எனவே போலீசார் கதவை உடைத்து திறந்து பார்த்தனர்.

அப்போது இசக்கிமுத்து உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே இசக்கிமுத்து உடல்நலக்குறைவால் இறந்தாரா? அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். சாத்தான்குளம் அருகே கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story