உத்தமபாளையம் அருகேலாரி மோதி தொழிலாளி சாவு:நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் மறியல்


உத்தமபாளையம் அருகேலாரி மோதி தொழிலாளி சாவு:நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 23 March 2023 6:45 PM GMT (Updated: 23 March 2023 6:45 PM GMT)

உத்தமபாளையம் அருகே லாரி மோதி தொழிலாளி இறந்த சம்பவத்தில் நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை திரு.வி.க. நகரை சேர்ந்தவர் சிலைராஜ் (வயது 37). கூலித்தொழிலாளி. நேற்று மாலை இவர், உத்தமபாளையத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் கோம்பைக்கு வந்து கொண்டிருந்தார். உத்தமபாளையம் - கோம்பை சாலையில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே வந்தபோது, எதிரே வந்த மினி லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிலைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த கோம்பை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் சிலைராஜ் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அவரது உறவினர்கள் உடலை மீட்க எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு இளங்கோவன், உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இ்டத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சிலைராஜின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து தங்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 4 மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி டிரைவரான கோம்பையை சேர்ந்த சதீஷ்குமார் (28) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story