மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்


மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்
x

கனமழை பெய்யும்போது பாதிக்கப்படும் மக்களை அங்கிருந்து மீட்பதும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதும் அரசின் கடமை .

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

மக்களுக்கு உணவுப் பொருட்களை உண்டாக்கித் தருவதும், தானே உணவாக அமைவதும் மழையே என மழையின் சிறப்பை போற்றும் வள்ளுவர், மக்கள் வாழ்வை கெடுப்பதும் மழை, கொடுப்பதும் மழை என்றும் குறிப்பிடுகிறார்.

கனமழை பெய்யும்போது பாதிக்கப்படும் மக்களை அங்கிருந்து மீட்பதும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதும் அரசின் கடமை என்பதுபோல, கனமழை ஓய்ந்த பிறகு மக்களை நோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமை.

அண்மையில் பெய்த அதிகனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி இருந்ததையும், அந்த மழைநீருடன் கழிவு நீர் கலந்ததையும், அந்த நீரில் மக்கள் நடமாடியதையும், இந்தத் தருணங்களில் பாதுகாக்கப்படாத நீரை மக்கள் பருகியதற்கான வாய்ப்பு இருந்ததையும் யாரும் மறுக்க முடியாது. இதன் காரணமாக, பொதுமக்களிடையே தொற்று நோய்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளது.

அசுத்தமான நீரில் காலை வைத்தவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்குரிய வாய்ப்பு உள்ளது என்றும், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு அதிகம் என்றும், இந்த நோயின் பாதிப்பு ஓராண்டு வரை தொடர வாய்ப்பு இருக்கிறது என்றும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 நபர்களில் 3 பேரை கொல்லக்கூடிய சக்தி பாக்டீரியாவிற்கு உண்டு என்றும், இந்தக் கிருமியை மண்ணிலிருந்து அகற்ற முடியாது என்பதால், நோயினால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை அளிக்க வேண்டுமென்றும், இந்தத் தொற்று நுரையீரல், தோல், ரத்தம் ஆகியவற்றில் உருவாகும் என்றும், இருமல், சுவாசக் கோளாறு, நெஞ்சு வலி, காய்ச்சல், பசியின்மை, தலைவலி ஆகியவை இதற்கான அறிகுறிகள் என்றும், இது குறித்த விழிப்புணர்வை மருத்துவர்களிடையேயும், மக்களிடையேயும் ஏற்படுத்த வேண்டுமென்றும், இதன்மூலம் மனித உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால்தான் எச்செல்வத்தையும் மக்கள் எளிதாக பெறமுடியும் என்பதையும்; நமது சமுதாயம் திறம்பட செயல்படுவதற்கும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் ஆரோக்கியம் அவசியம் என்பதையும் கருத்தில் கொண்டு, தொற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ முறைகளை மேற்கொள்ளவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story