அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 2 Nov 2022 9:52 AM GMT (Updated: 2 Nov 2022 9:57 AM GMT)

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அதனால் தான் நீட் தேர்வை பா.ம.க. கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பா.ம.க. முழுமையாக ஆதரிக்கிறது. அதே நேரத்தில் நீட் விலக்கு என்ற இலக்கை எட்டும் வரை அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.

அதைக் கருத்தில் கொண்டு தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு நடப்பாண்டில் இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. அதனால் அவர்களுக்கு குறைந்தது 500 இடங்கள் கிடைத்து விடும் என்பதாலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்குவதில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது. எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story