நெல்லை கண்ணன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - கே.எஸ்.அழகிரி இரங்கல்


நெல்லை கண்ணன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - கே.எஸ்.அழகிரி இரங்கல்
x

தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான, 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன்( 77) காலமானார். திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக நெல்லை கண்ணன் காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், இலக்கிய மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை கண்ணன் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழறிஞரும், மிகச் சிறந்த சொற்பொழிவாளருமான திரு. நெல்லை கண்ணன் அவர்கள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

பெருந்தலைவர் காமராஜர் மீது பற்று கொண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர். மகாகவி பாரதியார், பெருந்தலைவர் காமராஜர், கவியரசர் கண்ணதாசன் ஆகியோரைப் பற்றி திரு. நெல்லை கண்ணன் ஆற்றிய சொற்பொழிவுகள் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை எவரும் மறந்திட இயலாது.

இலக்கிய பட்டிமன்ற நடுவராக பொறுப்பேற்று கூறிய கருத்துகள் மிக ஆழமானவை, சிந்திக்கக் கூடியவை. மிகுந்த நகைச்சுவையோடு பேசக் கூடியவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் இளமைப் பருவம் முதல் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி பல பொறுப்புகளை வகித்தவர்.

தமிழகம் அறிந்த திரு. நெல்லை கண்ணன் அவர்களது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Next Story