நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு - கைது செய்யப்பட்ட 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்


நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு - கைது செய்யப்பட்ட 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
x

பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரையை தலைமை இடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 12% முதல் 30% வரை வட்டி வழங்குவதாகவும், பின்னர் இரட்டிப்புத் தொகையை முதிர்வுத் தொகையாக வழங்குகிறோம் எனவும் ஆசை வார்த்தி கூறியுள்ளனர். இதை நம்பி தமிழகம் முழுவதும் இருந்து பலர் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி, பணத்தை திருப்பி தரவில்லை என புகார் எழுந்தது. இந்த நிதி நிறுவனம், சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நியோமேக்ஸ் இயக்குநர்களான சைமன் ராஜா, கபில், பத்மநாபன் ஆகியோருக்கு ஏற்கனவே நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நியோமேக்ஸ் இயக்குநர்கள் சகாயராஜ் மற்றும் இசக்கிமுத்து ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்ககோரி மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், தினமும் காலை 10 மணிக்கு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து 2 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.



Next Story