நியோமேக்ஸ் மோசடி: தமிழகத்தில் 18 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை


நியோமேக்ஸ் மோசடி: தமிழகத்தில் 18 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 25 July 2023 8:30 AM GMT (Updated: 25 July 2023 8:44 AM GMT)

நியோமேக்ஸ் மோசடி புகாரில் தமிழகத்தில் 18 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

நெல்லை, மதுரை, சிவகங்கை, திருவாரூர், தேவகோட்டை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனமானது, தங்கள் பயனர்களுக்கு அதிக வட்டி தருவதாகவும், குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு பணம் இரட்டிப்பாகும் என கூறி சுமார் 70 ஆயிரம் பேரிடம் முகவர்கள் மூலம் ஆசை வார்த்தைகள் கூறி பணம் வசூல் செய்தது.

பணம் திரும்ப கொடுக்கப்படாததை அடுத்து, பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறையின சில மாதங்களுக்கு முன்னர் தென் மாவட்டத்தில் 17 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் 22கோடி ருபாய் வரையில் மோசடி நடந்ததாக கூறப்பட்டது.

மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 17 கிளை நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலை உயர்ந்த கார்கள், தங்கம் போன்ற பொருட்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

நியோ மேக்ஸ் நிறுவன இயக்குனர்கள், முகவர்கள் என 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது, நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் விருதுநகர், சிவகங்கை, மதுரை, திருவாரூர், நெல்லை உள்ளிட்ட 18 இடங்களில் இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story