டி.டி.வி.தினகரனை திவாலானவர் என்று அறிவிப்பது தொடர்பாக புதிய நோட்டீஸ்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு


டி.டி.வி.தினகரனை திவாலானவர் என்று அறிவிப்பது தொடர்பாக புதிய நோட்டீஸ்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

பெரா வழக்கில் அபராதம் செலுத்தாததால் டி.டி.வி.தினகரனை திவாலானவர் என்று அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு, சட்டப்படி புதிய நோட்டீசை பிறப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்று, இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றி அந்நியச்செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினர் பெரா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.28 கோடி அபராதத்தை டி.டி.வி.தினகரன் செலுத்தவில்லை. அதையடுத்து அவரை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த 2001-ம் ஆண்டு நோட்டீஸ் பிறப்பித்தது.

அந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நோட்டீசை ரத்து செய்து கடந்த 2003-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தார்.

தவறு இல்லை

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மத்திய அமலாக்கத்துறை கடந்த 2005-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, டி.டி.வி.தினகரனுக்கு விதிக்கப்பட்ட ரூ.28 கோடி அபராதத்தை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. ஆனால் இதுவரையிலும் தினகரன் அந்த தொகையை செலுத்தவில்லை. அதனால், சட்டரீதியாக அவரை திவாலானவர் என அறிவிக்கும்வகையில் அமலாக்கத்துறை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதில் எந்த தவறும் இல்லை என்று வாதிட்டார்.

மதிப்பை கெடுப்பதற்கு

டி.டி.வி.தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.குமார், தினகரனுக்கு உள்ள நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில்தான் அமலாக்கத்துறை இவ்வாறு இந்த நோட்டீசை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இது உரிமையியல் சார்ந்த பிரச்சினை எனக்கூறித்தான் ஐகோர்ட்டு தனி நீதிபதி திவால் நோட்டீசை ரத்து செய்தார். எனவே, இந்த விவகாரத்தில் அவரை திவாலானவர் என அறிவிக்கும்படி கேட்க முடியாது என்று வாதிட்டிருந்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.

அபராதமும் கடன்தான்

இந்நிலையில் இந்த தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

அபராதமாக விதிக்கப்பட்ட தொகையும் கடன்தான். அந்த கடனை செலுத்தாமல் இருக்கும்போது திவாலானவர் என அறிவிக்கக்கோரும் வகையில் அமலாக்கத்துறை நோட்டீஸ் பிறப்பிப்பது என்பது சட்டப்பூர்வமாக ஏற்புடையதுதான்.

ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை ரூ.28 கோடி அபராதம் விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மேல்முறையீட்டு வழக்கில் இறுதி செய்து உத்தரவு பிறப்பிக்கும் முன்பாகவே டி.டி.வி.தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

சட்டப்படி நடவடிக்கை

இந்த நோட்டீஸ் செல்லாது. அதை ரத்து செய்து பிறப்பித்துள்ள தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்கிறோம். எனவே இந்த மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் அன்னியச்செலாவணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.28 கோடி அபராத்தை செலுத்தவில்லை என்பதால் டி.டி.வி.தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை மீண்டும் புதிதாக நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Next Story