வீடு, வீடாக பொருள் வினியோகிக்கும் தொழிலாளர்களுக்கு புதிய நலவாரியம் -தமிழக அரசு அறிவிப்பு


வீடு, வீடாக பொருள் வினியோகிக்கும் தொழிலாளர்களுக்கு புதிய நலவாரியம் -தமிழக அரசு அறிவிப்பு
x

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் சுகி, சுமோட்டோ போன்ற உணவு வினியோகம், மின் வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை உள்ளிட்ட அனைத்து வகை வணிக பொருட்களின் வினியோகங்கள், இணைய செயலி வழியாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் இதர சேவைகள் தற்போது இணையவழி 'கிக்' என்ற முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் இணைய வழியே உணவு வினியோகம் உள்ளிட்ட சேவைப்பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நலவாரியம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சரால் 15.8.2023 அன்று சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியம் என்ற புதிய நலவாரியத்தை தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.


Next Story