அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்த புதுமாப்பிள்ளை சாவு


அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்த புதுமாப்பிள்ளை சாவு
x

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குடலிறக்கத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை உயிரிழந்தார். இதனால் உறவினர்கள், ஆஸ்பத்திரியை முற்றுகையிட திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர் தேவனாம்பட்டினம் தெற்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் உதயகுமார் (வயது 27). மீனவர். இவரது மனைவி மனிஷா (24). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. உதயகுமார் குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியதால், கடந்த 8-ந்தேதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நேற்று முன்தினம் காலை குடலிறக்கத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்ததும் அவர், வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு உதயகுமாருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அவருடன் இருந்த உறவினர்கள், அதுபற்றி பணியில் இருந்த செவிலியர்களிடம் கூறியுள்ளனர். உடனே செவிலியர்கள் அங்கு வந்து உதயகுமாரை, அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உதயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த அவரது உறவினர்கள் திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது அங்கு கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, உதயகுமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உதயகுமாரின் உறவினர்கள், இரவில் செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்ததாகவும், டாக்டர் யாரும் இல்லை என்றும், செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் தான் உதயகுமார் இறந்து விட்டதாக குற்றஞ்சாட்டினர்.

பரபரப்பு

அதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், உதயகுமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் உதயகுமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காரணம் என்ன?

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், குடலிறக்கத்துக்கு என அறுவை சிகிச்சை செய்தால், அதன் மூலம் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் இரவு நேரத்தில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு டாக்டர் பணியில் இருப்பார். உதயகுமாருக்கும் நல்ல முறையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றார்.


Next Story