திண்டிவனம் அருகே மருந்து விற்பனை பிரதிநிதி வெட்டிக் கொலை

திண்டிவனம் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மருந்து விற்பனை பிரதிநிதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள அன்னம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவருடைய மகன் ஹரிபிரகாஷ்(வயது 28). மருந்து விற்பனை பிரதிநிதி. மது குடிக்கும் பழக்கம் உடைய இவர் அவ்வப்போது மது அருந்தி வந்து அவரது தந்தையிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிபோதையில் வீட்டில் இருந்த ஹரி பிரகாசுக்கும் விநாயகத்துக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த விநாயகம் ஹரிபிரகாசை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலையில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஹரிபிரகாஷ் உயிரிழந்தார்.இது குறித்து ஒலக்கூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விநாயகத்தை தேடி வருகிறார்கள். குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மருந்து விற்பனை பிரதிநிதியை, அவருடைய தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.