கோத்தகிரியில் கேரட் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி- விவசாயிகள் கவலை

மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கேரட் கொள்முதல் விலை கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோத்தகிரி
மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கேரட் கொள்முதல் விலை கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மலைக்காய்கறிகள் சாகுபடி அதிகரிப்பு
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, விதை மற்றும் இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம், வன விலங்குகளின் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாத இறுதி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், காய்கறிகளை அறுவடை செய்த தோட்டங்களில் மீண்டும் பயிர் செய்யாமல் விவசாயிகள் நிலத்தை தரிசாக வைத்திருந்தனர். ஆனால் நடப்பாண்டு கோத்தகிரி பகுதியில் உறைப்பனியின் தாக்கம் அதிகமாக இல்லாததால் சில விவசாயிகள் மட்டும் காய்கறி விவசாயத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். எனவே மலை காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வந்ததால் அதன் கொள்முதல் விலை கணிசமாக அதிகரித்தது.
கிலோ ரூ.25-க்கு கொள்முதல்
ஆனால் கடந்த சில வாரங்களாக கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அறுவடைக்கு தயாரான கேரட் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் கேரட்டை அறுவடை செய்து, காய்கறி கழுவும் மையங்களுக்கு கொண்டு சென்று கழுவி, அதனை மூட்டைகளில் நிரப்பி காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கேரட் கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.120 வரை கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூட கேரட் கிலோவுக்கு ரூ.70 வரை காய்கறி மண்டிகளில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மாண்டிகளில் ரூ.40 முதல் ரூ.50 வரையும், கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.25 ரூபாய் முதல் ரூ.30 வரை மட்டுமே கொள்முதல் செய்யபடுகிறது.
விவசாயிகளுக்கு நஷ்டம்
கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாவிட்டாலும், லாபம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த கேரட் பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:- ஒரு ஏக்கர் பயிரிட சுமார் ஒன்றரை கிலோ விதைகள் தேவைப்படுகிறது. சாதாரண விதைகள் கிலோ ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாயும், ஹைப்ரிட் விதைகள் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. நந்தினி, ரொமான்ஸ், போர்ட் எப் போன், ஜிவேரா உள்ளிட்ட பல்வேறு ரக கேரட் விதைகள் உள்ளன. ஒரு ஏக்கரில் பயிரிட்டு அறுவடை செய்ய தொழிலாளர் சம்பளம், விதை, உரம், மருந்து உள்ளிட்டவைகளுக்கு என சுமார் ரூ.1½ லட்சம் செலவாகிறது. ஒரு ஏக்கரில் அறுவடை செய்தால் சுமார் 60 முதல் 80 முட்டைகள் கிடைக்கும். நல்ல விளைச்சல் ஆக இருப்பின் 100 மூட்டை கேரட் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது கேரட் விளைச்சல் அதிகரித்து இருப்பினும், கொள்முதல் விலை குறைந்து வருவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.