சிவகங்கை, சேலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை


சிவகங்கை, சேலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
x

சிவகங்கை, சேலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

சிவகங்கை,

தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகங்கையில் வசித்து வரும் வாலிபர் ஒருவருக்கு விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சிவகங்கையில் கல்லூரி சாலை வீதியில் வசித்து வரும் விக்னேஷ் (வயது 25) என்பவரின் வீட்டில் நேற்று அதிகாலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை காலை 5 மணி முதல் 7 மணி வரை 2 மணி நேரம் நடந்தது. சோதனையின் முடிவில் அங்கிருந்து சில புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.

மேலும் விக்னேசுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த யாருடன் தொடர்பு இருந்தது? என்பது பற்றியும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரா?

இதற்கிடையே விக்னேஷ். நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் என தகவல்கள் பரவின. ஆனால், அதை மறுத்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் அறிக்கை வெளியிட்டார்.

சேலத்தில்...

சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த செவ்வாய்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதியை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், கைதான வாலிபர்கள் இருவரும் தங்கியிருந்த செட்டிச்சாவடி பகுதியில் உள்ள வீட்டில் நேற்று மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் துப்பாக்கி தயாரிப்பதற்கான குறிப்புகள், உபகரணங்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள், கியாஸ் அடுப்புகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அதிகாரிகள் கணக்கெடுத்தனர். அந்த பொருட்களை கோர்ட்டில் விரைவில் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story