ரூ.1½ லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டதாக வங்கியில் இருந்து நோட்டீஸ்


ரூ.1½  லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டதாக வங்கியில் இருந்து நோட்டீஸ்
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:45 PM GMT)

விவசாய நிலமே இல்லாதவருக்கு ரூ.1½ லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

மயிலாடுதுறை

விவசாய நிலமே இல்லாதவருக்கு ரூ.1½ லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

வங்கி நோட்டீஸ்...

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(வயது 38). கொத்தனார் வேலை செய்து வருகிறார். தினசரி வேலைக்கு சென்று உணவு உள்ளிட்ட குடும்பத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வரும் இவருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி கடிதம் ஒன்று அனுப்பி உள்ளனர்.

அந்த கடிதத்தில் தங்கள் வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் பயிர் கடன் பெருமாள் பெற்றுள்ளதாகவும், தற்போது அது வட்டியுடன் சேர்த்து நிலுவைத் தொகையாக ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 831னாக உள்ளது என்றும், இந்த தொகையை செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான பெருமாள் இதுகுறித்து வங்கியில் 3 முறை கேட்டதாகவும், அதற்கு வங்கி அதிகாரிகள் சரிவர பதில் அளிக்கவில்லை என்றும் பெருமாள் தெரிவித்தார்.

மன உளைச்சல்

இதனால் என்ன செய்வதென்று புரியாமல் இருந்த பெருமாள், வக்கீல் வேலுகுபேந்திரன் மற்றும் குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து, விவசாய நிலமே இல்லாத தங்களுக்கு பயிர் கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், எனவே, தனது பெயரில் வங்கியில் மோசடியாக பணத்தை பெற்றுக் கொண்ட நபர்களின் மீதும், எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் மோசடியாக பயிர் கடன் கொடுத்த வங்கியின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தார்.


Next Story