வெள்ள நிவாரண தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு


வெள்ள நிவாரண தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2023 7:24 PM GMT (Updated: 17 Dec 2023 1:11 AM GMT)

ரேஷன் கார்டு இல்லாதவர்களும் வெள்ள நிவாரண தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரியில் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கான டோக்கன் விநியோகம் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே சமயம் டோக்கன் கிடைக்காதவர்கள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ஆகியோரும் வெள்ள நிவாரண தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் இன்று காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நிவாரண தொகைக்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் நிவாரண தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு 044-28592828 மற்றும் 1100 என்ற இலவச தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.




Next Story