ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து: எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் அவசர ஆலோசனை


ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து: எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் அவசர ஆலோசனை
x

ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர்.

சேலம்,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை இல்லை என்று குறிப்பிட்டார். இதனால் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்த விவாதம் மீண்டும் பரபரப்பானது.

இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு பேட்டி அளித்து முடித்த அடுத்த சில நிமிடங்களில், சேலம் நெடுஞ்சாலை நகரில் இருந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு இரவு 8.40 மணியளவில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் காரில் வந்தனர்.

அங்கு அவர்கள் இருவரும் எடப்பாடி பழனிசாமியுடன் அவசரமாக ஆலோசனை நடத்தினர். அதே நேரத்தில் 10 நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் சரோஜா அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்று விட்டார். முன்னாள் அமைச்சர் தங்கமணி, எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளிப்பார் என்ற பரபரப்பு நிலவியதால் அங்கு பத்திரிகையாளர்கள் இரவில் குவிந்திருந்தனர்.


Next Story