நாவக்குறிச்சி கிராமத்தில் கோவில் நிலங்கள் ஏலம் 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


நாவக்குறிச்சி கிராமத்தில் கோவில் நிலங்கள் ஏலம் 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 5 July 2023 8:06 PM GMT (Updated: 6 July 2023 12:18 PM GMT)

நாவக்குறிச்சி கிராமத்தில் கோவில் நிலங்கள் ஏலம் 20-ந் தேதிக்கு ஒத்திவைப்புஎதிர்ப்பு தெரிவித்து அதிகாரியை முற்றுகையிட்டவர்களால் பரபரப்பு ஏற்ப்பட்டது

சேலம்

தலைவாசல்

நாவக்குறிச்சி கிராமத்தில் கோவில் நிலங்கள் ஏலம் 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரியை முற்றுகையிட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் நிலங்கள் ஏலம்

சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்து நாவக்குறிச்சி கிராமத்தில் மாரியம்மன், விநாயகர், கம்பபெருமாள், நைனபூர்வ நாராயண பெருமாள், வைத்தியநாதசுவாமி ஆக 5 கோவில்களும், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் ஆகும்.

நாவகுறிச்சி கிராமத்தில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கோவில் ஆய்வாளர் அருள்மணி முன்னிலையில் ஏலம் நடைபெறுவதாக இருந்தது. அதேபோல் ஆறகளூர் அய்யனார் கோவில், மாரியம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களுக்கு சொந்தமான நிலங்களும் நாவக்குறிச்சி கிராமத்தில்தான் ஏலம் விடப்படுவதாக இருந்தது.

20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இந்தநிலையில் ஒரு தரப்பினர், கோவில் நிலங்கள் தொடர்பாக எங்களுக்கு முறையான தகவல் வரவில்லை. எனவே ஏலம் விடும் தேதியை இன்னொரு நாள் ஒத்திவைக்க வேண்டும் என்று முறையிட்டனர். அதனை ஏற்று அதிகாரிகள் கோவில் நிலங்கள் ஏலம் தேதியை 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து கோவில் ஆய்வாளர் அருள்மணியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, செல்வராசு, வேல்முருகன் மற்றும் போலீசார் முற்றுகயைிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

அறிவிப்பு நோட்டீசு

பின்னர் கோவில் ஆய்வாளர் அருள்மணி, வடசென்னிமலை கோவில் செயல் அலுவலர் ராஜதிலகம், சிதம்பரஈஸ்வர் கோவில் செயல் அலுவலர் சங்கர் ஆகியோர், 20-ந் தேதி ஏலம் ஒத்தி வைக்கப்பட்டதற்கான அறிவிப்பு நோட்டீசை தேவியாக்குறிச்சி மாரியம்மன் கோவில் முன்பும், கிராம நிர்வாக அலுவலகம் முன்பும் ஒட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.


Next Story