விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி ஆய்வு


விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:46 PM GMT)

விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலையத்தில் மண்டல அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க வழிவகை செய்யும்படி அங்கிருந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

விழுப்புரம்

விழுப்புரம் விதை பரிசோதனை நிலையத்தில் திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். விதை பரிசோதனை நிலையத்திற்கு வரப்பெறும் மாதிரிகளில் விதைகளின் முளைப்புத்திறன் சோதனை, ஈரப்பத சோதனை, புறத்தூய்மை சோதனை, பிறரக கலப்பு விதைகளை கண்டறியும் சோதனை முறைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக சான்றுவிதை மாதிரிகளில் பிற ரக கலவன்கள் சரியான முறையில் பிரித்தெடுக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டார்.

அறிவுரை

பரிந்துரைக்கப்பட்ட அளவிலான புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் பிற ரக கலவன்களின்றி உள்ள விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்க செய்வதே விதை பரிசோதனை நிலையத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

மேலும் பெறப்படும் விதை மாதிரிகளை உரிய நேரத்தில் பரிசோதனை செய்து வழங்குமாறும், விதை பரிசோதனை நிலையத்திற்கு வரும் விதை மாதிரிகளை சீரிய முறையில் பகுப்பாய்வு செய்து தரமான விதைகள், விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் சந்தோஷ்குமார், கீதா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story