சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்; அமலாக்கத்துறை ஐகோர்ட்டில் மனு


சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்; அமலாக்கத்துறை ஐகோர்ட்டில் மனு
x

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி நிர்பந்தித்தாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் வாக்குமூலம் அளித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள், குவாரி அதிபர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த செப்.12-ம் தேதி தீவிர சோதனை நடத்தினர்.

இதில், மணல் குவாரிகளின் மொத்த முகவராக செயல்பட்டு வந்த புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி பணம்,ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1,024கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர் திலகம் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் பொதுத்துறை, நீர்வளத் துறை செயலர்கள், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அதில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி நிர்பந்தித்தாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் வாக்குமூலம் அளித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


Next Story