ஏரியில் மூதாட்டி பிணம்


ஏரியில் மூதாட்டி பிணம்
x
தினத்தந்தி 21 March 2023 6:45 PM GMT (Updated: 21 March 2023 6:45 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரியில் மூதாட்டி பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே தொட்டிகுடிசை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி அலமேலு (வயது 70). இவர் கடந்த 18-ந் தேதி 100 நாள் வேலைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன் சத்யராஜ் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அலமேலுவை தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அலமேலுவை தேடினர். இந்த நிலையில் ஏமப்பூர் ஏரியில் நேற்று அலமேலு பிணமாக கிடந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் அலமேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் மூதாட்டியை யாரேனும் அடித்து கொலை செய்து ஏரியில் வீசிவிட்டு சென்றார்களா?, அல்லது ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story