முதியவர் அடித்து கொலை


முதியவர் அடித்து கொலை
x

பழனி அருகே குடும்ப தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அமரபூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 80). அவருடைய மகன் ராமராஜ் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்லாமல் ராமராஜ் வீட்டில் இருந்தார். இதனால் ராமசாமிக்கும், ராமராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் ராமராஜின் மனைவி மேகலா, மகன் மகேஷ் ஆகியோர் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் ராமசாமி, ராமராஜ் ஆகியோர் இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ராமராஜ், தனது தந்தை என்று கூட பாராமல் ராமசாமியை சரமாரியாக அடித்தார். பின்னர் அவர், ராமசாமியை கீழே தள்ளி விட்டார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில், குடும்ப தகராறில் மகனே தந்தையை அடித்தும், தள்ளி விட்டும் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ராமசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமராஜை கைது செய்தனர்.


Next Story