கம்பத்தில் மூதாட்டி தற்கொலை:கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியல்


கம்பத்தில் மூதாட்டி தற்கொலை:கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 7 Jan 2023 6:45 PM GMT (Updated: 7 Jan 2023 6:45 PM GMT)

கம்பத்தில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

மூதாட்டி தற்கொலை

கம்பம் தீயணைப்பு துறை அலுவலகம் அருகே வசித்து வருபவர் மாசாணத்தேவர். இவரது மனைவி ராசாத்தி (வயது 72). கடந்த 4 நாட்களாக இவர், அதே பகுதியில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று வீட்டிற்கு வந்தார். இதற்கிடையே அவரது மகன் கணேசன் ராசாத்தியை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தார். அப்ேபாது அங்கு உள்ள கழிப்பறையில் ராசாத்தி தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கணேசன் கதறி அழுதார். இந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் ராசாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் சாலை மறியல்

இதையடுத்து ராசாத்தியின் மகன் கணேசன் போலீசில் புகார் கொடுத்தார். அதில், எங்களது குடும்பத்தினருக்கும் அருகே வசித்து வரும் மற்றொரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது தாய் மற்றொரு தரப்பினர் வீட்டிற்கு சமாதானம் பேச சென்றார். அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் எனது தாயிடம் தகராறு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் எனது தாய் மன விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே புகாரில் கூறிய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராசாத்தியின் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story