முடிச்சூரில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி


முடிச்சூரில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x

முடிச்சூரில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கிளாம்பாக்கத்தில் போதிய வசதிகள் இல்லாததால் வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்கப்போவதாக தெரிவித்தனர்.

ஆனால் இதற்கு தடை விதித்த போக்குவரத்து துறை, நகருக்குள் ஆம்னி பேருந்துகள் நுழைய கூடாது என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என்றும், மறு உத்தரவு வரும்வரை இந்த நடைமுறையை தொடரலாம் எனவும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தாம்பரம், முடிச்சூரில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதனை அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர் பாபு ,

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் தேவைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த ஐடியல் பார்க்கிங் 5 ஏக்கரில் 300 பேருந்துகள் மற்றும் 300 ஊழியர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தி உள்ளோம். புதிய ஆம்னி பேருந்து நிறுத்தம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். என கூறினார்.


Next Story