ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும் - அமைச்சர் சிவசங்கரன் அறிவுறுத்தல்


ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும் - அமைச்சர் சிவசங்கரன் அறிவுறுத்தல்
x

ஆம்னி பஸ்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போக்குவரத்துக் கழக பஸ்கள் முறையாக இயக்கப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இம்முனையத்தில் இருந்து அனைத்து தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களும் புறப்பாடு செய்வது குறித்தும் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து முழுமையாக புறப்பாடு செய்வது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும் சென்னை கோயம்பேடு மற்றும் பிற முக்கிய இடத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ஆம்னி பஸ்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சிறப்பு அலுவலர் ஐ.ஜெயக்குமார், போக்குவரத்துத்துறை ஆணையர் அ.சண்முகசுந்தரம், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பெருநகர சென்னை காவல் கூடுதல் ஆணையாளர்(போக்குவரத்து) ர.சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story