விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சபாநாயகர் அப்பாவு உள்பட 7 பேருக்கு விருது


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சபாநாயகர் அப்பாவு உள்பட 7 பேருக்கு விருது
x

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் சபாநாயகர் அப்பாவு உள்பட 7 பேருக்கு விருதை திருமாவளவன் வழங்கினார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 17-வது ஆண்டு விருது வழங்கும் விழா, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் சிந்தனைசெல்வன், ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர்கள் செல்லதுரை, வி.கோ.ஆதவன் உள்பட மாநில-மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சபாநாயகர் அப்பாவுக்கு விருது

விழாவில் சபாநாயகர் அப்பாவுக்கு காமராஜர் கதிர் விருதை திருமாவளவன் வழங்கினார். விருதுடன் பாராட்டு பட்டயம், நினைவு கேடயம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.

அதேபோல, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சாரியாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது, டெல்லி முன்னாள் மந்திரி ராஜேந்திரபால் கவுதமுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருதும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவுக்கு பெரியார் ஒளி விருதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு மார்க்ஸ் மாமணி விருதும், பெங்களூரு சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மோகன் கோபாலுக்கு காயிதே மில்லத் பிறை விருதும், தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டன. அத்துடன் பாராட்டு பட்டயம், நினைவு கேடயம் மற்றும் ரூ.50 ஆயிரமும் விருதாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மோகன் கோபாலுக்கு பதிலாக அவரது நண்பர் விஞ்ஞானி முருகன் பெற்றுக்கொண்டார்.

பறையடித்த எம்.எல்.ஏ.

விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழாவில் பறையடித்தல் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக கலைஞர்கள் பறை கருவிகளுடன் ஒத்திகையில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.

அப்போது நிகழ்ச்சிக்கு வந்த எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கலைஞர்களுடன் இணைந்து தானும் பறையடித்து மகிழ்ந்தார். எம்.எல்.ஏ. பறையடித்து மகிழ்ந்ததை பலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

விழாவில் கலந்துகொண்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சின்னம் பதித்த டி-சர்ட் வழங்கப்பட்டது.


Next Story