காவிரி கரைகளில் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்


தினத்தந்தி 3 Aug 2022 2:14 AM GMT (Updated: 3 Aug 2022 4:17 AM GMT)

காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

சேலம்:

காவிரி கரையோரப்பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.

பக்தர்கள் வழிபாடு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பக்தர்களும் பொதுமக்களும் காவிரியில் வந்து புனித நீராடி தங்கள் இஷ்ட தெய்வங்களையும் குலதெய்வங்களையும் மற்றும் மேட்டூர் அணைக்கட்டு முனியப்ப சாமி வழிபட்டு செல்வது வழக்கம்.

புதுமணத்தம்பதிகள் தங்கள் திருமணத்தின் போது அறிவித்திருந்த மலர் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு புனித நீராடி வழிபடுவார்கள். பெண்கள் அனைவரும் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்வார்கள். கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல மணமகன் அமைய வேண்டியும், காவிரி தாயை வழிபட்டு மஞ்சள் கயிறுகளை கட்டி கொள்வார்கள்.

இதன் அடிப்படையில் இன்று காலையில் இருந்து சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் மேட்டூர் வந்தனர். இவர்கள் காவேரி பாலம் பகுதியில் ஆற்றில் நீராடி அணைக்கட்டு முனியப்ப சாமியை வழிபட்டு தங்கள் இல்லங்களுக்கு திரும்பினார்கள்.

2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஆடிப்பெருக்கு

இவ்விழாவை முன்னிட்டு காவேரி பாலம் பகுதியில் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு பொருட்கள், ராட்டினங்கள், தின்பண்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவதால் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது.

இவ்விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் உடன் நாட்டு நல பணி திட்ட மாணவர்கள், ஊர்க்காவல் படையினர், வருவாய்த்துறை இணைந்து பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் கூட்டம்

வெள்ள எச்சரிக்கை

மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து சாமி சிலைகள் சாமியின் ஈட்டி, வேல் போன்ற ஆயுதங்கள் காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்து சுத்தம் செய்து மேளதாளங்களுடன் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டது.

தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பக்தர்கள் மேட்டூர் காவிரி பாலம் மற்றும் மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள பகுதியில் மட்டுமே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் மற்ற எந்த பகுதிகளிலும் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

மேலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் கண்காணிப்பு கோபுரமும் கண்காணிப்பு கேமராவும் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேட்டூர் நகராட்சி சார்பில் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு காவேரி பாலம் பகுதியில் தற்காலிக உடைமாற்றும் வரை மின்விளக்கு வசதி உட்பட அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story