தமிழக அரசின் 2 ஆண்டு நிறைவை முன்னிட்டு, புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணை


தமிழக அரசின் 2 ஆண்டு நிறைவை முன்னிட்டு, புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணை
x

தமிழக அரசின் 2 ஆண்டு நிறைவை முன்னிட்டு, புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

1 லட்சம் பேருக்கு....

தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களை பாராட்டி கேடயங்கள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அனைத்து தகுதியுள்ள பயனாளிகளுக்கும் மாதாந்திர ஓய்வூதிய தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் போன்ற நலிவுற்ற பிரிவினர்களுக்கு 12 வகையான திட்டங்களின் கீழ் தற்போது 34 லட்சத்து 62 ஆயிரத்து 92 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

தற்போது பல்வேறு மாவட்டங்களில் இத்தகைய முதியோர் உதவித்தொகைக்கான அனுமதி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள 64 ஆயிரத்து 98 பேர் மற்றும் புதிதாக 35 ஆயிரத்து 902 பேர் என மொத்தம் ஒரு லட்சம் பேர் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறும் வகையில் (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500/-) பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தி முதல்-அமைச்சர் ஆணையிட்டார்.

அதன் அடிப்படையில் ஒரு லட்சம் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில், 10 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கி அந்த திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இவர்கள் அனைவரும் ஜூன் மாதம் முதல் உதவித்தொகையை பெறத் தொடங்குவார்கள்.

புதுமைப்பெண் திட்ட பற்றுஅட்டை

பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக்கிட 5.9.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை 5.9.2022 அன்று சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர்கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்ப தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.

புதுமைப் பெண் திட்டத்தின் முதற்கட்டத்தில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 210 மாணவிகளும், 8.2.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்ட 2-ம் கட்டத்தின் மூலம் மேலும் 94 ஆயிரத்து 507 மாணவிகளும் என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 717 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்காக இதுவரை மொத்தம் ரூ.121.18 கோடி மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக, நேற்று நடந்த நிகழ்ச்சியில் 10 மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

நான் முதல்வன் திட்டம்

தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கென தொழில் துறையின் தேவை சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கும் நான் முதல்வன் திட்டத்தை 1.3.2022 அன்று முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 2022-23-ம் ஆண்டு 13 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

கல்லூரி பாடத்திட்டத்தில் வழங்கப்படும் வழக்கமான பாடப்பிரிவுகளுடன் சேர்த்து மாறிவரும் தொழில் நுட்ப உலகிற்கேற்ப திறன் படிப்புகளை வழங்குவதே நான் முதல்வன் திட்டம் ஆகும்.

துறை சார்ந்த வல்லுனர்களின் உதவியுடன் பிரத்யேக திறன்சார் பாடங்களை வடிவமைத்து, அவர்கள் கல்லூரி பாடத் திட்டத்துடனேயே சேர்த்து அவர்கள் படிக்கும் கல்லூரிகளில் வழங்குவதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 483 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 972 மாணவர்களும், 842 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 338 மாணவர்களும் பயனடைந்துள்ளனர்.

இப்பயிற்சிகளின் மூலமாக மாணவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வேலைவாய்ப்பை பெற்று தருவதற்கான முகாம்கள் கல்லூரி வளாகங்களிலேயே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

என்ஜினீயரிங் மாணவர்கள்

என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2022-23-ம் ஆண்டு நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 1 லட்சத்து 15 ஆயிரத்து 682 இறுதியாண்டு மாணவர்களுக்கு, சீமென்ஸ், டஸ்சால்ட், மைக்ரோசாப்ட், ஐ.பி.எம்., சிஸ்கோ ஆட்டோடெஸ்க் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாகவும், எல் அன்டு டி, டி.சி.எஸ்., இன்போசிஸ், என்.எஸ்.இ. போன்ற புகழ்பெற்ற உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாகவும் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.

இதன் பலனாக, தமிழ்நாடு முழுவதும் இதுவரை நடந்துள்ள வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 59 ஆயிரத்து 132 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்கள் இம்மாத இறுதிவரை நடைபெறவுள்ளது.

கலைக் கல்லூரி மாணவர்கள்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 2 லட்சத்து 48 ஆயிரத்து 734 இறுதியாண்டு மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களின் பயிற்றுநர் மற்றும் பாடங்களுடன் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன் பலனாக, தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் இதுவரை நடைபெற்றுள்ள வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 62 ஆயிரத்து 634 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு முகாம்கள் ஜூன் மாத இறுதிவரை நடைபெறவுள்ளது.

மேலும், சி.ஐ.ஐ., டிட்கோ, சிப்காட், எம்.எஸ்.எம்.இ., எல்காட், டிஷ்.எம்ப்ளாய்மென்ட், ஸ்டார்ட்அப் டிஎன், கைடன்ஸ் டிஎன், எப்ஐ சிசிஐ, நாஸ்காம் போன்ற அமைப்புகளுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி மேலும் பல லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக நேற்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கலை மற்றும் அறிவியல், என்ஜினீயரிங் கல்லூரிகளில் பயின்று திறன் பயிற்சி முடித்து பல்வேறு தனியார் நிறுவனங்களில் உயர்ந்த ஊதியத்துடன் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்தவர்களில் 5 பேருக்கு முதல்-அமைச்சர் கேடயங்களை வழங்கி பாராட்டி வாழ்த்தினார். அவர்களில் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் ஊதியம் பெறும் இளைஞர்களும் இடம் பெற்றிருந்தனர்.

புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலமாக பயன் அடைந்த மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மேடைக்கு வந்து, அவர்கள் பெற்ற நன்மைகளை எடுத்துக் கூறி தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், ரகுபதி, சாமிநாதன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பெருநகர சென்னை மேயர் பிரியா, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story