வன உயிரின வார விழாவை முன்னிட்டுகும்பக்கரை அருவிக்கு நாளை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி செல்லலாம்:வனத்துறை அறிவிப்பு


வன உயிரின வார விழாவை முன்னிட்டுகும்பக்கரை அருவிக்கு நாளை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி செல்லலாம்:வனத்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:45 PM GMT)

வன உயிரின வார விழாவை முன்னிட்டு கும்பக்கரை அருவிக்கு நாளை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி செல்லலாம் என்று வனத்துறையினர் அறிவித்தனர்.

தேனி

பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிக்கு மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தினமும் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தற்போது அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் தினமும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.20 வனத்துறை மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி குளித்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட இருப்பதால் வழக்கத்தை விட நாளை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி வனத்துறையினர் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அடிப்படை வசதிகளையும் செய்து தர முன்வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story