சமாதியின் உள்ளே இருந்து நேரடி 'கவரேஜ்' மக்கள் கேட்ட வரங்கள் கிடைக்கும் - நித்யானந்தா


சமாதியின் உள்ளே இருந்து நேரடி கவரேஜ் மக்கள் கேட்ட வரங்கள் கிடைக்கும் - நித்யானந்தா
x

நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சமாதியின் உள்ளே இருந்து நேரடி ‘கவரேஜ்’ என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை

பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.

அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார். இந்த நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தரப்பில் இருந்து சில முகநூல் (பேஸ்புக்) பதிவுகள் வெளியாகி வருகின்றன. "நான் இறந்துவிட்டதாக சிலர் புரளிகளை கிளப்பி வருகிறார்கள். நான் தற்போது சமாதியில் இருக்கிறேன்.

ஆனால் இறக்கவில்லை. பேசும் திறன் இல்லை. சொற்பொழிவாற்ற சில காலம் ஆகும். 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பிரபஞ்ச சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.

18 வயது இளைஞனை போல இதயம் துடித்து, உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நித்ய சிவபூஜை தொடர்ந்து நடைபெறுகிறது" என்று ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தா. இது போல் தொடர்ந்து பேஸ்புக்கில் அவரது பெயரில் பதிவிடப்பட்டு வருகிறது.

இப்படி அடுத்தடுத்த குழப்பமான பதிவுகளை வெளியிட்ட இந்த நித்தியானந்தா தற்போது மீண்டும் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.அதில் தன்னை முழுமையாக தூங்க முடியவில்லை எனவும் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை எனவும் கூறியிருக்கிறார். அதோடு தற்போது வந்த மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் படி தனது உடல் ஆரோக்கிய மானதாக இருக்கும் எனக் கூறியுள்ள நித்யானந்தா, தனது ஆசிரமத்தில் நிர்வாகத்தினை சிஷ்யர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனவும் கூறியுள்ளார்

இது குறித்து நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சமாதியின் உள்ளே இருந்து நேரடி 'கவரேஜ்' என குறிப்பிட்டுள்ளார். மேலும் சமாதியில் உண்மையான அர்த்தம் என்னவென்றால் சம+ஆதி. அனைத்தும் சமநிலையை அடைவதாகும். அதாவது என் உடல், மனம், உணர்வுகள், பயோமெமரி, பயோ எனர்ஜி ஆகியவை எல்லாம் சமநிலையை அடைந்து மீண்டும் பழைய நிலையை அடையும்.

வாதம், பித்தம், கபம் ஆகிய 3 தோஷங்களும் சமமாக இருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால் உடலில் தேங்கி உள்ள கொழுப்பு மற்றும் ஜீரணமாகாத உணவு பல வடிவங்களில் உடலை விட்டு வெளியேறுகிறது.

உடல் முற்றிலும் நச்சு தன்மை பெறுகிறது. அதனால் தான் வெளிப்புற உணவு இல்லை. அல்லது வழக்கமான தூக்கம் இல்லாமல் இருக்கிறேன்.

நான் இந்த சமாதி நிலையில் இருக்கும்போது மக்கள் கேட்ட வரங்கள், பிராத்தனைகள், விருப்பங்கள் அனைத்தும் கிடைக்கும். பரமசிவனிடம் இருந்து ஆற்றல் கிடைக்கப்பெற்று அது தீவிரமடைந்து அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றும்.

நான் சமாதியில் இருக்கும்போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளே இருந்து கொண்டே பதில் அளிக்கப்படுகிறது. நான் அனைவரிலும் ஒன்றாக கலந்துவிட்டேன்.

நான் சமாதியில் இருக்கும்போது வெறுப்பாளர்கள், எதிரிகள் என்னை தூற்றுவதற்கு சக்தியை இழந்துவிடுவார்கள். ஒவ்வொருவரின் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாய்ப்புகள், ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப நான் ஒவ்வொவருராக பார்க்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story