அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் தேர்வு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்


அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் தேர்வு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
x

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கான தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது முதலில் உடற்தகுதித் தேர்வும், பின்பு எழுத்துத் தேர்வும் நடைபெற்று வந்த நிலையில் இனிமேல் முதலில் ஆன்லைன் மூலமாக பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும், இதில் வெற்றி பெறுபவர்கள், அடுத்த கட்டமாக உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்தின் கீழ் பொதுப்பணி, தொழில்நுட்பம், குமாஸ்தா, ஸ்டோர்கீப்பர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், மார்ச் 15-ந் தேதி (நாளை) விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியிட்டு ராணுவத்தில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் சேர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உள்ளிட்ட 11 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story