தஞ்சை வக்கீலிடம் ரூ.75 ஆயிரம் மோசடி
![தஞ்சை வக்கீலிடம் ரூ.75 ஆயிரம் மோசடி தஞ்சை வக்கீலிடம் ரூ.75 ஆயிரம் மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2022/10/12/920819-police-enqury.webp)
தஞ்சை வக்கீலிடம் ரூ.75 ஆயிரம் மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வளாக வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 68). வக்கீல். இவர் தஞ்சை மாவட்ட சைபர்கிரைம் போலீஸ்நிலையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-நான், என்னுடைய மகளுக்கு பணம் அனுப்புவதற்காக என்னுடைய வங்கியின் இணையதள பக்கத்தின் மூலம் முயற்சி செய்தேன். அப்போது வங்கியின் குறியீடு போட்டு ஒரு பக்கம் உருவானது. அது உண்மையான வங்கி இணைய பக்கம் என்று நினைத்த நான், அந்தபக்கத்தின் மூலம் பணம் அனுப்ப முயற்சி செய்தேன். அப்போது அதில் என்னுடைய கணக்கின் முழு விவரங்களை பதிவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நானும் வங்கி கணக்கு எண், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தேன். தொடர்ந்து எனது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை அதில் பதிவிட கேட்டிருந்ததன் பேரில் அதையும் பதிவிட்டேன். உடனே என்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.24ஆயிரத்து 999 மற்றும், ரூ.50 ஆயிரம் என இரண்டு தவணைகளாக ரூ.74 ஆயிரத்து 999 எடுத்ததாக குறுந்தகவல் வந்தது. இது குறித்து வங்கி அதிகாாிகளிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து என்னிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டு தரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.