யூகங்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது - விளையாட்டு நிறுவனங்கள்


யூகங்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது - விளையாட்டு நிறுவனங்கள்
x

யூகங்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று விளையாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

சென்னை,

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தி வரக்கூடிய நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், திறமையை நம்பி பந்தயம் வைத்து விளையாடும் விளையாட்டுகளை சூதாட்டமாக கருத முடியாது. அதனால் பந்தயம் வைத்து விளையாடும் திறமைக்கான விளையாட்டு சூதாட்டம் என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது என்று கூறினார்.

மேலும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தலாமே தவிர தடை விதிக்க முடியாது என்றும் ஒரே செயலை ஆன்லைனில் விளையாடுவதையும் நேரில் விளையாடுவதையும் வித்தியாசப்படுத்தி பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். யூகங்களின் அடிப்படையில் எந்த உண்மை தகவல்களையும் சேகரிக்காமல் அவசரகதியில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதேபோல் சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

வாதங்கள் முடிவுறாத நிலையில் வழக்கின் விசாரணை வருகிற 24-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் மற்றொரு மூத்த வக்கீல் ஆஜராகி வாதங்களை முன்வைக்க அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.


Next Story