"நான் நடிக்கிறது தான் பிரச்சினையா?"-ஆன்லைன் ரம்மி விளம்பர விவகாரம்- சரத்குமார் ஆவேச பதில்


நான் நடிக்கிறது தான் பிரச்சினையா?-ஆன்லைன் ரம்மி விளம்பர விவகாரம்- சரத்குமார் ஆவேச பதில்
x
தினத்தந்தி 4 Sep 2022 9:36 AM GMT (Updated: 4 Sep 2022 9:44 AM GMT)

தனது கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் நடிகர் சரத்குமார் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்..

திருச்சி,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற தொகுதி செயலாளர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களுக்கு சேவை செய்ய தேர்தல் களத்துக்கு வரவேண்டும். ஆனால் இன்றைக்கு தேர்தலில் போட்டியிட சாதாரண குடிமகன்கள் தயக்கப்படுகிறார்கள். ஏனென்றால் பெரிய அளவில் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆகவே அதற்கு ஈடு கொடுத்து நம்மால் முடியாது என்று ஒதுங்குகிறார்கள். இது உண்மையான ஜனநாயகம் கிடையாது. நாம் தயங்கும்போது கூட்டணிக்கு செல்ல நேரிடுகிறது. இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்க இருக்கின்றோம். 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் எங்கள் கட்சி நிர்வாகிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் தனித்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.

ஆன்லைனில் ரம்மி ஆட்டம் மட்டும் அல்ல, கிரிக்கெட் உள்ளிட்ட எவ்வளவோ விளையாட்டுகள் உள்ளன. அதுவும் சூதாட்டம்தான். இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக நிறுத்தினால்தான் இதிலிருந்து எல்லாரும் விடுபடுவார்கள்.

குடிப்பழக்கம் குடியை கெடுக்கும். ஆனால் குடிக்காமல் இருக்கிறார்களா? குடிக்காதீர்கள் என நானும் தொடர்ந்து கூறி வருகிறேன். இதேபோல் புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு. ஆனால் தயாரிப்பதை ஏன் நிறுத்தவில்லை?

எனவே உலகத்தில் எல்லாமே இருக்கிறது, நீங்கள் அதைப்பார்த்து கெட்டுப்போகாதீர்கள், மனப்பக்குவத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். நல்லவையும் இருக்கின்றன, தீயவையும் இருக்கின்றன. நல்லவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், தீயவற்றை விட்டுவிடுங்கள் என்று சொல்கிறோம். நாம் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் அவர்கள் கடையை மூடிவிட்டு போய்விடுவார்கள்.

தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் முன்னணி கட்சிகளாக இருக்கின்றன. அ.தி.மு.க.வில் இப்போது அடித்துக் கொள்வதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அ.தி.மு.க.வின் எதிர்காலம் குறித்து சொல்ல நான் ஜோசியர் இல்லை. ஒற்றுமை இல்லை என்றால் எதிர்காலம் இல்லை. முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்.

தெலுங்கு தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டிலும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உட்கார்ந்து விரைந்து பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த இருக்கிறது என்று கேட்டதற்கு, மின் வாரியத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது.

மாநில அரசின் வருவாயையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டால் மாநில அரசுகள் இங்கு தேவையில்லை. விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று முதல்வரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.


Next Story