ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது..!


ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது..!
x

மண் சரிவு காரணமாக கடந்த 9-ம் தேதி முதல் நேற்று வரை ஊட்டி மலை ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

ஊட்டி,

கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, ரெயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன.

ரெயில் பாதையோரத்தில் இருந்த மரங்கள் தண்டவாளத்தின் குறுக்கே சாய்ந்தன. மண் அரிப்பு ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் அடித்து செல்லப்பட்டன. மண் சரிவு காரணமாக கடந்த 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையும், 9-ந் தேதி முதல் 18-ந் தேதி வரையும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் 10 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் தொடங்கியது. 180-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை உதகையை நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது. மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story