மீண்டும் தொடங்கியது ஊட்டி மலை ரெயில் சேவை..!


மீண்டும் தொடங்கியது ஊட்டி மலை ரெயில் சேவை..!
x
தினத்தந்தி 8 Nov 2023 2:26 AM GMT (Updated: 8 Nov 2023 5:13 AM GMT)

மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் இடையே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து மலைரெயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் ரெயில் சேவை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டது. ரெயில் பாதை சீரமைக்கும் பணி முழுவதும் முடிந்த பின்னர் மலைரெயில் சேவை தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், தொடர் மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையிலான மலை ரெயில் போக்குவரத்து 4 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர்.


Next Story