திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்- அமைச்சர் சிவசங்கர்


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்- அமைச்சர் சிவசங்கர்
x

பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

சென்னை,

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்

அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருநாள் 26/11/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும், 27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், 25/11/2023 சனிக்கிழமை முதல் 27/11/2023 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2,700 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளன.

மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியமும் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


Next Story