300 சிறப்பு பஸ்கள் இயக்கம்


300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

தொடர் விடுமுறை காரணமாக கும்பகோணம் கோட்டத்தில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்தார்.

தஞ்சாவூர்

தொடர் விடுமுறை காரணமாக கும்பகோணம் கோட்டத்தில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை), 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையையொட்டியும், 18-ந் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டியும் பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 சிறப்பு பஸ்களும் என கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதேபோன்று விடுமுறைக்கு வந்த பணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 18-ந் தேதியும், 19-ந் தேதியும் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுதுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முன்பதிவு

முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவைக்கு ஏற்ப போக்குவரத்து கழகங்கள் கணித்து அதற்கு ஏற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும். அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்களுக்கும் முன்பதிவு சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story