முத்துப்பேட்டையில், 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை


முத்துப்பேட்டையில், சாகர் கவாச் ஆப்ரேஷன் பாதுகாப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 10:22 AM GMT)

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல்கள் இருக்கிறதா? என்று முத்துப்பேட்டையில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர்.

திருவாரூர்

பாதுகாப்பு ஒத்திகை

இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு, கடலோர கிராமங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா? என்பதை பரிசோதிக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக மரைன் போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து கடந்த ஆண்டுகளில் ஆப்ரேஷன் அம்லா, சாகர் கவாச் (கடல்கவசம்) 'சி விஜில் ஆகிய பெயரில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மாநில கடலோரப்பகுதிகளில் 2 நாட்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதியில் நேற்று தொடங்கியது.

பாதுகாப்பு பணியில் போலீசார்

இதையடுத்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் ஜாம்புவானோடை, செங்காங்காடு, தில்லைவிளாகம், இடும்பாவனம், தொண்டியக்காடு, பேட்டை, தம்பிக்கோட்டை கிழக்காடு உள்பட பல பகுதியில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை தொடங்கியது. அதன்படி முத்துப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதில் இடும்பாவனம், தில்லைவிளாகம், கோபாலசமுத்திரம், தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தீவிர சோதனை

மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சிறப்பு வாகன ரோந்தில் ஈடுபட்டனர். இதனை திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சோமசுந்தரம், சட்ட ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர். முன்னதாக முத்துப்பேட்டை கடலையொட்டி அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய காடான அலையாத்திக்காடு மற்றும் லகூன் பகுதியில் முத்துப்பேட்டை கடலோர காவல்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கடலோர காவல்படை போலீசார் படகில் சென்று மீனவர்கள் படகு, சுற்றுலா பயணிகள் செல்லும் படகுகள் மற்றும் படகுதுறை, காட்டில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் பகுதியில் தீவிரவாதிகள்- சமூக விரோதிகள் யாரும் இருகிறார்களா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த ' சாகர் கவாச் ஆப்ரேஷன்' ஒத்திகையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார், கடலோர காவல்படை போலீசார், சிறப்பு போலீசார், ஊர்க்காவல் படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story