போதிய வகுப்பறைகள்-ஆய்வகங்கள் இல்லாத அரசு பள்ளிகளை கணக்கெடுக்க உத்தரவு
பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய வகுப்பறைகள்-ஆய்வகங்கள் இல்லாத அரசு பள்ளிகளை கணக்கெடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர் அருகே எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அப்பள்ளியில் ஆய்வகங்களும், வகுப்பறைகளும் பற்றாக்குறையாக இருப்பதை அறிந்தார்.
இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ-மாணவகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து, போதிய வகுப்பறைகள் இல்லாத பள்ளிகள், ஆய்வகங்கள் இல்லாத பள்ளிகள், புனரமைப்பு தேவைப்படும் பள்ளிகளின் தகவல்களை சேகரித்து அறிக்கையாக வழங்கிட வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் அந்தந்த பள்ளிகளுக்கு போதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மாணவர் விடுதி
பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் தொழிற்பயிற்சி மாணவர் விடுதி தொடங்கிடவும், கீழக்கணவாயில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் தொழில்நுட்ப மாணவர் விடுதி தொடங்கிடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் விடுதிகளுக்கான சொந்த கட்டிடங்கள் கட்டப்படும் வரை தகுதியான தனியார் கட்டிடங்கள் உள்ளதா? என்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கீழக்கணவாயில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.