திருக்கோவிலூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு


திருக்கோவிலூர் நகைக்கடை    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
x

திருக்கோவிலூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் வடக்கு வீதியில் உள்ள பாபுலால் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரும்பு கதவை வெட்டி எடுத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மேற்பார்வையில் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், ராஜசேகர் மற்றும் மாணிக்கம் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 2 தனிப்படை போலீசார், கொள்ளையர்கள் குறித்து விசாரிக்க சென்னைக்கு விரைந்துள்ளனர். மேலும் 2 தனிப்படை போலீசார், கொள்ளை சம்பவம் நடந்த நேரத்தில் நகைக்கடை இருந்த பகுதியில் பதிவாகி இருந்த செல்போன் அழைப்புகளையும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். கூடிய விரைவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடித்து விடுவோம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story