தமிழக அரசு ஏற்பாடு: காசிக்கு 200 போ் ஆன்மிக பயணம் : பக்தர்கள் கருத்து


தமிழக அரசு ஏற்பாடு:  காசிக்கு 200 போ்   ஆன்மிக பயணம் :  பக்தர்கள் கருத்து
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:47 PM GMT)

தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம் குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனி

ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு புனித தலம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒருமுறையாவது அங்கு சென்றுவர வேண்டும் என்பது அவரவர் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

இந்துக்கள் காசி செல்வதை புண்ணியமாக கருதுகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதை பெருமையாக சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணத்தை கடமையாக கொள்கிறார்கள்.

வசதி படைத்தவர்கள் நினைத்த மாத்திரத்தில் மேற்சொன்ன புனித தலங்களுக்கு சென்று வந்துவிடுகிறார்கள்.

வசதி குறைந்தவர்களால் அவ்வாறு செல்லமுடிவது இல்லை.

அரசு ஏற்பாடு

அவ்வாறு வசதி இல்லாதவர்கள் புனித தலங்களுக்கு சென்றுவர அரசாங்கம் உதவி வருகிறது.

ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 550 பேர் அரசு நிதி உதவியுடன் ஜெருசலேம் சென்று வருகிறார்கள். தமிழக அரசின் மானிய உதவியுடன் இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணம் செல்கிறார்கள்.

அதுபோல் இந்துக்கள் 500 பேர் ஆண்டு தோறும் மானசரோவர், முக்திநாத் ஆகிய தலங்களுக்கு சென்றுவர உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2012-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதற்கான திட்டத்தை தொடங்கிவைத்தார்.

காசி ஆன்மிக பயணம்

இந்தநிலையில் கடந்த மே மாதம் சட்டசபையில் நடந்த இந்துசமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை அறிவிப்பில், "காசிக்கு ஆன்மிக பயணமாக 200 பேர் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற தகவல் வெளியானது. அதற்கான செலவு ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், 'ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 20 மண்டலங்களில் 200 பேர் ஆன்மிக பயணத்துக்கு ராமேசுவரம் கோவில் நிர்வாகத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். தகுதிவாய்ந்தவர்கள் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அந்தந்த மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உள்ளவராகவும், 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இந்த ஆண்டு காசி புனித பயணத்துக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 200 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட இருக்கிறது' என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வயது தளர்வு

தமிழக அரசின் இந்த ஆன்மிக பயண திட்டத்தை மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

முருகன் (சிவனடியார், சுருளிப்பட்டி) :- ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட அனைவருக்கும் காசிக்கு சென்று வர வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். பழங்காலங்களில் காசிக்கு யாத்திரை செல்வது என்றால் 6 மாத காலம் கூட ஆகும். வாகன வசதி, ரெயில் வசதி போன்றவை வந்த பிறகு பயணங்கள் எளிதாகியது. இருந்த போதிலும் காசிக்கு சென்று வர வேண்டும் என்ற ஆசை, ஏழை, எளிய மக்களுக்கு கைகூடாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

தற்போது அரசே ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக பயணம் அழைத்துச் செல்வது மிகவும் வரவேற்கத்தக்கது. ஏழை, எளிய ஆன்மிகவாதிகளுக்கு இது பயனுள்ளது. பாதுகாப்பான பயணமாகவும் இருக்கும். அதே நேரத்தில் இதற்கான வயது நிர்ணயம் 60 வயது முதல் 70 வயதுக்கு மிகாதவர்கள் என்று இருக்கிறது. அந்த வயது வரம்பை 45 வயதில் இருந்து 70 வயது வரை என மாற்றி அமைக்கலாம். 60 வயதுக்கு மேல் முதுமை காரணமாக பெரும்பாலான மக்களால் தனியாக நெடுந்தூரம் பயணம் செய்ய உடல் ஒத்துழைக்காது. துணைக்கு யாரேனும் வர வேண்டிய தேவை இருக்கும். எனவே, வயது தளர்வு செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் போதே காசிக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.

மாவட்டத்துக்கு 50 பேர்

பிச்சைமணி (உப்புக்கோட்டை) :- எனக்கு வயது 60 ஆகிறது. இந்து சமய அறநிலையத்துறை மூலம் காசிக்கு ஆன்மிக பயணம் அழைத்துச் செல்வது நல்ல திட்டம். ஆனால், மாநிலம் முழுவதும் மொத்தம் 200 பேர் என்பது குறைவான எண்ணிக்கையாக உள்ளது. மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 50 பேர் வீதமாவது அழைத்துச் சென்றால் இதன் மூலம் அதிகம் பேர் பயன்பெற முடியும். குறைவான எண்ணிக்கை காரணமாக பலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

அசோகன் (உப்புக்கோட்டை) :- ஆன்மிகவாதிகளுக்கு வாழ்வில் ஒருமுறையாவது காசிக்கு சென்று வர வேண்டும் என்ற ஆசை உண்டு. அதை அரசே ஏற்படுத்திக் கொடுப்பது வரவேற்கத்தக்கது. இந்த பயணத்தை வரலாற்று சிறப்பு மிக்க ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து தொடங்குவது கூடுதல் சிறப்பு. இந்த ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும். அது வாழ்வில் மறக்க முடியாத மனநிறைவான பயணமாக இருக்கும்.

செல்வம் (உத்தமபாளையம்) :- ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தமிழகத்துக்கும் காசிக்கும் ஆன்மிக தொடர்பு உள்ளது. இந்த வரலாற்று தொடர்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இந்த ஆன்மிக பயணத்தை தமிழக அரசு தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. அதிக பக்தர்கள் இதன் மூலம் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மொத்தத்தில் இந்த திட்டம் இந்து சமூக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Related Tags :
Next Story