பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார்: ஆம்னி பஸ்களுக்கு ரூ.92,500 அபராதம்


பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார்: ஆம்னி பஸ்களுக்கு ரூ.92,500 அபராதம்
x

பயணிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தினங்களை ஒட்டி ஆம்னி பஸ்களில் வழக்கத்துக்கு மாறான அதிக கட்டணம் வசூலிக்கும் புகார் குறித்து கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிற 2.1.2023 வரை சென்னை வடக்கு சரக பகுதியில் சோதனை நடத்தப்படுகிறது.

இதன்படி கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடி பகுதிகளில் சிறப்பு ஆம்னி பஸ்களில் சோதனை செய்யப்பட்டது. இதில் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிக்கும் புகார் மற்றும் வரி செலுத்தப்படாமல் இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பஸ்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது. இதில் 49 ஆம்னி பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.92,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும் வழக்கத்துக்கு மாறான அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் பெறப்பட்ட ஆம்னி பேருந்துகளில் இருந்து 9 பயணிகளுக்கு ரூ.9,200 அதிக கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது. இதுபோன்ற வரி செலுத்தப்படாமல் அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கோயம்பேடு, போரூர் பகுதிகளில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தி அபராதம் விதித்தனர்.


Next Story