பஞ்சாயத்து செயலாளரை தாக்கி நகை பறிப்பு


பஞ்சாயத்து செயலாளரை தாக்கி நகை பறிப்பு
x

களக்காடு அருகே பஞ்சாயத்து செயலாளரை தாக்கி நகை பறித்தனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மாவடி ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் அருணாசலம் மகன் கனிதுரை (வயது 45). இவர் கள்ளிகுளம் பஞ்சாயத்து செயலாளராக உள்ளார். அதே பஞ்சாயத்தில் 100 நாள் திட்ட பணி பொறுப்பாளராக கள்ளிகுளத்தை சேர்ந்த வள்ளிநாயகம் மனைவி சங்கரம்மாள் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் பணி சம்பந்தமாக அடிக்கடி பேசியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சங்கரம்மாளின் உறவினர்கள் கனிதுரையிடம் இதுபற்றி கேட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று கனிதுரை கீழதுவரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சங்கரம்மாளின் சகோதரர் சத்திரம் கள்ளிகுளத்தை சேர்ந்த லெட்சுமணன் மகன் சிங்கபாண்டி (32), அவரது உறவினரான கோபால் மகன் சங்கர் (31) ஆகியோர் கனிதுரையை வழிமறித்தனர். இதையடுத்து அவர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதனைதொடர்ந்து அவரை சிங்கபாண்டி, சங்கர் ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த 3½ பவுன் எடையுள்ள தங்க சங்கிலி, 9 கிராம் எடையுள்ள மோதிரம் ஆகியவற்றையும் பறித்ததாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த கனிதுரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிங்கபாண்டி, சங்கர் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story