விழுப்புரத்தில் பரபரப்பு: பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்-பொதுமக்களை வெளியேற்றிவிட்டு போலீசார் தீவிர சோதனை


விழுப்புரத்தில் பரபரப்பு: பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்-பொதுமக்களை வெளியேற்றிவிட்டு போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:46 PM GMT)

விழுப்புரத்தில் பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றிவிட்டு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

விழுப்புரம்

பிரபல வணிக வளாகம்

விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் பிரபல தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வணிக வளாகம் இயங்கி வருகிறது.

இந்த வணிக வளாகத்தில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு நேற்று மதியம் 1.15 மணியளவில் அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பை அங்குள்ள கிளை மேலாளர் ஒருவர் எடுத்து பேசியுள்ளார்.

அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர் ஒருவர், உங்கள் நிறுவன உரிமையாளரிடம் பேச வேண்டும் என்றும், அவரிடம் தொலைபேசியை கொடுக்குமாறும் கூறியுள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல்

அதற்கு அந்நிறுவன கிளை மேலாளர், தற்போது உரிமையாளர் இங்கு இல்லை என்று கூறவே, உங்கள் நிறுவனங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இதுபற்றி நிறுவன உரிமையாளரை தொடர்புகொண்டு பேசினார். அவர் இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ஆனந்தன், மூர்த்தி, நடராஜன், விஜயகுமார், விநாயகமுருகன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த வணிக வளாகத்திற்கு விரைந்து சென்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் வணிக வளாகத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீஸ் மோப்ப நாய் ராணி மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்தனர்.

பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

வணிக வளாகத்தில் உள்ள 4 தளங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் இருந்தனர். இதனால் ஒவ்வொரு தளத்திலும் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி அங்கிருந்த பொதுமக்கள், ஊழியர்களிடம் வெடிகுண்டு மிரட்டல் வந்த தகவலை தெரிவித்து அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். அதேபோல் வணிக வளாகத்திற்குள் பொதுமக்கள் யாரும் வராத அளவிற்கு அதன் நுழைவுவாயில் முன்பு போலீசார், பேரிகார்டு மூலம் தடுப்பு அமைத்தனர்.

தீவிர சோதனை

ஒட்டுமொத்தமாக வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்கள், ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றிய பிறகு போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று மோப்ப நாய் உதவியுடனும், மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடனும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சோதனை மாலை 6 மணியளவில் முடிவடைந்தது. இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகுதான் இது வெறும் புரளி என்பது தெரியவந்ததையடுத்து பொதுமக்கள், நிறுவன ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து நிறுவன மேலாளர் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது?, யார் போன் செய்தார்கள், என்ன காரணத்திற்காக இதுபோன்ற புரளியை கிளப்பினார்கள் என்பது குறித்து சைபர்கிரைம் பிரிவு உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story