தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா  இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:46 PM GMT)

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி வரும் 5-ந்தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது.

சிவகங்கை

இளையான்குடி,

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி வரும் 5-ந்தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது.

தாயமங்கலம் திருவிழா

இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா இன்று இரவு காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. முன்னதாக இன்று காலை நவசக்தி ஹோமம், லாட்சார்ச்சனை விழாவும், இரவு 10 மணிக்கு விக்னேஷ்வரர் பூஜை நடக்கிறது.

அதன் பின்னர் கொடி மரத்தில் கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பொங்கல் வைபவம்

வருகிற 5-ந்தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பத்துடன் வந்து கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் வைத்தும், ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் கோவிலுக்கு வர முடியாதவர்கள் கோவில் அமைந்துள்ள திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபாடு செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறார்.

மறுநாள் 6-ந்தேதி இரவு 7.15 மணிக்கு மின்சார தீப அலங்காரத்துடன் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந்தேதி பக்தர்கள் பால்குடம், அக்னி மற்றும் அலகு குத்துதல், அங்க பிரதட்சணம், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.50 மணிக்கு ஊஞ்சல் வைபவம் நிகழ்ச்சியும், இரவு 10.20 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 8-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடே சன் செட்டியார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story