காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; காதலன் விஷம் குடித்து தற்கொலை - அதிர்ச்சியில் காதலி தூக்கிட்டு தற்கொலை...!


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; காதலன் விஷம் குடித்து தற்கொலை - அதிர்ச்சியில் காதலி தூக்கிட்டு தற்கொலை...!
x
தினத்தந்தி 10 Aug 2022 3:33 PM GMT (Updated: 10 Aug 2022 4:01 PM GMT)

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் நேற்று விஷம் குடித்தும், காதலி இன்று தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டனர்.

நாங்குநேரி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவருக்கு மனைவி சரஸ்வதி(47). இவர்களது மகன் உதயசங்கர்(20) மகள் சுதா (22).

மகள் சுதா நெல்லை பேட்டையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியில் மஞ்சங்குளத்தைச் சேர்ந்த தனது தாய் மாமன் பெரியசாமியின் மகன் சுப்பையா(24) என்பவரை மாணவி சுதா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

வாலிபர் சுப்பையாவின் அண்ணன் இருவர் திருமணமாக நிலையில் உள்ளதாலும், சுதா படிப்பை முடிக்க வேண்டியது இருப்பதாலும் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த வாலிபர் சுப்பையா நேற்று வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளார். பின்னர், அவரை பெற்றோர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் வாலிபர் சுப்பையா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து சுப்பையாவின் உடல் நேற்று பிற்பகல் நாங்குநேரிக்குக் கொண்டு வரப்பட்டது . இதனால் சுதாவின் பெற்றோர் துக்க வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தான் மனதார விரும்பிய மாமன் மகன் சுப்பையா விஷம் குடித்து உயிரிழந்ததால் வாழ்வில் வெறுப்படைந்த சுதா வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர், மாலை சுமார் 3 மணி அளவில் சுப்பையாவின் இறுதி சடங்கு முடிந்ததும் வீட்டுக்கு வந்த தாய் சரஸ்வதி வீட்டில் கதவு உள்பக்கமாக பூட்டியிருப்பது கண்டு சந்தேகம் அடைந்தார். பின்னர், ஜன்னல் வழியாக பார்த்த போது சுதா தூக்கி தொங்கி கொண்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து அங்கு வந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று சுதாவின் உடலை மீட்பு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த நாங்குநேரி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலர்கள் இருவரும் உறவினர்களாக இருந்த போதிலும் பெற்றோர்கள் எதிர்ப்பால் இருவரும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story